search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை அருகே விபத்து: கனிம வளம் ஏற்றிச் சென்ற  லாரி மோதி பெண் பலி
    X

    விபத்துக்கு காரணமான டாரஸ் லாரி

    குழித்துறை அருகே விபத்து: கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மோதி பெண் பலி

    • லாரி திடீரென தாறுமாறாக ஓடி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஞானதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • லாரிகளால் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செங்கொடி பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ், ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவரது மனைவி பீனா (வயது 52). இவர்களது மகள் திருமணமாகி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளை பார்த்து வர பீனா விரும்பி உள்ளார். இதற்காக கணவர் ஞானதாசுடன் இன்று காலை ஊரில் இருந்து புறப்பட்டார். அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். காலை 8 மணியளவில் குழித்துறை மேம்பாலம் பகுதியில் சென்ற போது பின்னால் கனிமவளம் ஏற்றிய டாரஸ் லாரி வந்தது.

    அந்த லாரி திடீரென தாறுமாறாக ஓடி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஞானதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஞானதாஸ் சாலையின் ஓரம் விழுந்தார். ஆனால் பீனா, சாலையின் நடுவே விழுந்தார்.

    அப்போது அவரது தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பீனா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். காலில் காயம் அடைந்த ஞானதாஸ், தனது கண்முன்பு மனைவி பலியானதை பார்த்து உடல் அருகே அமர்ந்து கதறி அழுதார். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பீனா உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஞானதாசும் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து காரணமாக குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட் டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் தினசரி கனிம வளங்களை வாகனங்களில் அதிக அளவு ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதை தடுக்க வேண்டும். சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி அடிக்கடி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக போலீசார் சோதனைகள் நடத்தி வந்தாலும், லாரிகளால் விபத்துக்கள் தொடர்ந்து வருவது வேதனையான சம்பவமாக உள்ளது.

    Next Story
    ×