search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே கட்டிடத் தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற நண்பர்கள்
    X

    சூலூர் அருகே கட்டிடத் தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற நண்பர்கள்

    • வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து விஜயராகவனை சரமாரியாக தாக்கினர்.
    • கால்வாயை திறந்து பார்த்த போது உள்ளே வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    சூலூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் ரவி (60). இவரது மகன் விஜயராகவன் (வயது44). இவருக்கு திருமணமாகி விட்டது.

    திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் விஜயராகவனை அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக விஜயராகவன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் விஜயராகவன் திருவாரூரில் இருந்து கோவை செங்கத்துறைக்கு வந்தார்.

    அங்கு தனது தந்தை ரவி மற்றும் நண்பர் ஸ்டாலின் (45) ஆகியோருடன் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுடன் திருவாரூரை சேர்ந்த மேலும் சிலரும் தங்கி இருந்தனர்.

    இவர்கள் அனைவரும் ஒன்றாகவே வேலைக்கு செல்வது, குடிப்பது வழக்கம். தினமும் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதும், பின்னர் அவர்களே சமாதானம் அடைவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    நேற்று விடுமுறை என்பதால் முந்தைய நாள் இரவு விஜயராகவன், அவரது தந்தை ரவி, ஸ்டாலின் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மதுகுடிக்க சென்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தனர். பின்னர் அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர்.

    அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த போது, அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து விஜயராகவனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    அவர் இறந்து போனதால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஜயராகவனின் உடலை அங்கிருந்து சாக்கடை கால்வாய்க்குள் தூக்கி வீசி விட்டு உடல் வெளியில் தெரியாத படி பலகையை போட்டு மூடி விட்டு தப்பியோடி விட்டனர்.

    நேற்று ஓட்டல் திறக்க வந்த ஊழியர்கள், கடையின் முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததாலும், அருகே உள்ள கால்வாய் திடீரென மூடப்பட்டிருந்ததாலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கால்வாயை திறந்து பார்த்த போது உள்ளே வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். உடனே இதுகுறித்து அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர்.

    பின்னர் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கால்வாயில் கிடந்தது விஜயராகவன் என்பதும், அவரை அவரது நண்பர்கள் அடித்து கொன்று சாக்கடையில் வீசியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் கொல்லப்பட்ட விஜயராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விஜயராகவனை மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் அடித்து கொன்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்டாலின் உள்பட அனைவரும் திருவாரூரை சேர்ந்தவர்கள். இதனால் இவர்கள் அங்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் அவர்களை பிடிப்பதற்காக திருவாரூக்கு விரைந்துள்ளனர். அவர்கள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×