search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே வாலிபரை கடப்பாறையால் அடித்துக்கொன்ற தந்தை
    X

    நெல்லை அருகே வாலிபரை கடப்பாறையால் அடித்துக்கொன்ற தந்தை

    • நேற்றும் வழக்கம்போல் மகாராஜன் குடித்துவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • தந்தையுடன் தகராறில் ஈடுபட்ட மகாராஜன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). விவசாயி.

    இவரது மகன் மகாராஜன்(24). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அதன்பின்னர் மகாராஜன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன்பின்னர் மகாராஜனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து போதையில் தனது பெற்றோரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

    நேற்றும் வழக்கம்போல் மகாராஜன் குடித்துவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தந்தையுடன் தகராறில் ஈடுபட்ட அவர் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.

    இதற்கிடையே தினமும் தகராறில் ஈடுபட்டு வருவதால் மனவேதனை அடைந்த ஆறுமுகம் ஆத்திரம் அடைந்தார். நள்ளிரவில் வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்துச்சென்ற அவர், அங்குள்ள அறையில் தூங்கி கொண்டிருந்த மகாராஜனின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    இதில் மகாராஜனின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. சிறிது நேரத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் ஆறுமுகம் மானூர் போலீசில் சரண் அடைந்தார். அவர் தெரிவித்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் ஆறுமுகம் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த மகாராஜன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். கொலையான மகாராஜன் பெயர் மானூர் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×