search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி அருகே விவசாயி சரமாரி வெட்டிக்கொலை
    X

    ஏர்வாடி அருகே விவசாயி சரமாரி வெட்டிக்கொலை

    • அருணாசலம் கோர்ட்டில் ஆஜராகி முருகனுக்கு எதிராக சாட்சி கூற தயாராகி வந்துள்ளார்.
    • ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் மேலூரை சேர்ந்தவர் அருணாசலம் என்ற கக்கன் (வயது 60). விவசாயி. இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

    அதே ஊரை சேர்ந்தவர் பிச்சைக்கண்னு மகன் முருகன். கடந்த 2021-ம் ஆண்டு தளபதிசமுத்திரம் குளத்தில் மீன் குத்தகை எடுப்பதில், அருணாசலம் தரப்பினருக்கும், முருகன் தரப்பினருக்கும் போட்டி ஏற்பட்டது.பின்னர் அருணாசலத்தின் தரப்பினருக்கு மீன் குத்தகை ஏலம் வழங்கப்பட்டது.

    தனது தரப்பினருக்கு மீன் குத்தகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த முருகனுக்கு, அருணாசலத்தின் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் அருணாசலம், முருகனுக்கு எதிராக சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து கோர்ட்டில் முருகனுக்கு எதிராக அருணாசலம் சாட்சி சொல்ல முடிவு செய்திருந்தார். இந்நிலையில் முருகன், அருணாசலத்திடம் தனக்கு எதிராக சாட்சி கூற கூடாது என்று கூறியுள்ளார்.

    மேலும் உறவினர்கள் மூலம் சமரசமும் செய்துள்ளார். ஆனால் அதற்கு அருணாசலம் மறுத்து விட்டார். மேலும் கோர்ட்டில் முருகனுக்கு எதிராக சாட்சி கூறுவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

    அந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நாங்குநேரி கோர்ட்டில் இன்று நடைபெறவிருந்தது. அருணாசலம் கோர்ட்டில் ஆஜராகி முருகனுக்கு எதிராக சாட்சி கூற தயாராகி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று இரவில் அருணாசலம் அதே ஊரில் உள்ள தனது மகள் முத்துசெல்வி வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த முருகன் உள்பட 5 பேர் சேர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி ஏர்வாடி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாசலம் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

    இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×