search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி

    • வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை மளிகை கடையை திறக்க வந்தார்.
    • மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்ந்தவர் சண்முகராஜா. இவரது மகன் பிரவீன் (14). இவர் கொடிவேரியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.

    சண்முகராஜா வடக்கு பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவர் பிரவீன் தினமும் காலையில் மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவும் கடையில் வியாபாரம் முடிந்ததும் ஷட்டரை பூட்டி விட்டு சென்றனர்.

    வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை 6.30 மணியளவில் மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதுப்பற்றி தெரியாத பிரவீன் ஷட்டரை திறந்த போது மின்சாரம் தாக்கி அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மாணவர் பிரவீனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மின்சார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×