search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டை கொத்தளத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார்
    X

    கோட்டை கொத்தளத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார்

    • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோர், வேலைவாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், டாக்டர் ஆகியோருக்கான விருதுகளை முதலமைச்சர் வழங்குவார்.
    • சமூகப்பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருது வழங்கப்படும்.

    சென்னை:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா, இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டில் இருந்து காரில் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுசின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும், பின்னாலும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வருகின்றனர்.

    கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திறங்குவார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச்செயலாளர் இறையன்பு வரவேற்பார்.

    அங்கு தென் இந்திய பகுதிகளின் தலைமைப்படை தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படை தள விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல்,

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

    பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதலமைச்சரை தலைமைச்செயலாளர் அழைத்து செல்வார்.

    அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார்.

    பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு முதலமைச்சர் வருவார். அங்கிருந்தபடி மூவர்ண தேசிய கொடியை காலை 9 மணிக்கு முதலமைச்சர் ஏற்றி வைப்பார். மூவர்ண பலூன்கள் அப்போது பறக்க விடப்படும்.

    போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைப்பார்கள். அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி நிகழ்த்துவார்.

    அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோர், வேலைவாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், டாக்டர் ஆகியோருக்கான விருதுகளை முதலமைச்சர் வழங்குவார். அதைத்தொடர்ந்து சமூகப்பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருது வழங்கப்படும். பின்னர் விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

    தற்போது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. சுதந்திர தின விழாவின்போது, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக பெருமளவில் கூட்டம் கூடுவதை மாநில அரசுகள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

    இந்த விழாவில் மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் நேரில் பங்கேற்க வேண்டாம் என்றும், சுதந்திர தின விழாவை டி.வி.யில் கண்டு மகிழுங்கள் என்றும் அனைவருக்கும் கடந்த ஆண்டில் தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்த ஆண்டும் அதுபோன்ற அறிவிப்பை தமிழக அரசு வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமருவதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே சமூக இடைவெளி விட்டு தனித்தனியான பந்தல்களில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் முககவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    விழாவில் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று சிறப்பிப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்காக ஜார்ஜ் கோட்டை உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×