search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமான நிலைய இயக்குனரை சோதனை செய்த மத்திய பாதுகாப்பு படை வீரர்
    X

    விமான நிலைய இயக்குனரை சோதனை செய்த மத்திய பாதுகாப்பு படை வீரர்

    • விமான நிலைய இயக்குனர் இது குறித்து கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக சென்றுள்ளார்.
    • பாதுகாப்பு படை வீரர் உடனடியாக வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் அதிகமான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியில் இருப்பவர்கள் விமான பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் சோதனை செய்த பின்னரே விமான நிலையத்திற்குள் அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும்.

    திருச்சி விமான நிலைய இயக்குனராக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளிமாநிலத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தின் முனைய பகுதிக்குள் அவர் வந்தார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் காவலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார்.

    அதனை விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி காண்பித்த பின்னரும் அவரை உள்ளே அனுமதிக்காமல், அவர் அளித்த அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் மீண்டும் சோதனை செய்துள்ளார்.

    இருந்தபோதிலும் விமான நிலைய இயக்குனர் இது குறித்து கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக சென்றுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விளக்கம் கேட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் உடனடியாக வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிகழ்வானது விமான நிலையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பணியில் இருந்த காவலருக்கு விமான நிலைய இயக்குனரை கூட தெரியாமல் அவர் எவ்வாறு பணிபுரிந்தார் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

    மேலும் விமான நிலைய இயக்குனரை சோதனை செய்யும் நிலை இதுபோன்று பலமுறை நடைபெற்று இருப்பதும், இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    மற்ற அலுவலர்களோ, அதிகாரிகளோ விமான நிலையத்திற்குள் நுழையும் போது அவர்களது அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளே அனுமதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஒரு விமான நிலைய இயக்குனர் முனையத்திற்குள் நுழையும்போது அவரின் அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்பு உள்ளே அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×