search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
    X

    பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

    • பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தேர்வுக்கு தயாராகும் வகையில் கடுமையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.
    • ஆடை குறைபாட்டை மற்ற மாணவர்கள் கேலி செய்ததால் மனமுடைந்த மாணவர் செல்வபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காளவாசல் கலைஞர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50). இவரது மனைவி லட்சுமி (48). கதிர்வேல் அருகே உள்ள ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கோகிலா என்ற மகளும், செல்வபிரகாஷ் என்ற மகனும் இருந்தனர். இதில் மகள் கோகிலாவுக்கு திருமணமாகி மம்சாபுரம் பகுதியில் தனது கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்.

    செல்வபிரகாஷ் கீழராஜகுலராமன் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தேர்வுக்கு தயாராகும் வகையில் கடுமையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று காலை பெற்றோரிடம் கூறி விட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற செல்வபிரகாஷ் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் அவர் பள்ளி முடிந்து சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

    இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் மகள் கோகிலா வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கதிர்வேல் தற்போது குடியிருக்கும் வீட்டின் அருகே புதிதாக வீடு கட்ட கொட்டகை அமைத்துள்ளார். அங்கு சென்று பார்த்த போது, செல்வபிரகாஷ், சால்வையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறித்துடித்தனர். பின்னர் இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவர் செல்வபிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன, பள்ளியில் ஆசிரியர்கள் திட்டினார்களா, இல்லை சகமாணவர்கள் கேலி செய்தார்களா அல்லது தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில் ஆடை குறைபாட்டை மற்ற மாணவர்கள் கேலி செய்ததால் மனமுடைந்த மாணவர் செல்வபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×