search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சசிகலா- ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வேண்டும்: 100 தேவர் அமைப்புகள் கடிதம்
    X

    சசிகலா- ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வேண்டும்: 100 தேவர் அமைப்புகள் கடிதம்

    • சென்னையில் ஜூன் 23-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது தென் மாவட்டங்களில் உள்ள அவரது ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்டதால் அந்த கட்சியில் தங்கள் இனத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தென் மாவட்டங்களில் உள்ள தேவர் இன அமைப்புகள் கருதுவதாக கூறப்படுகிறது.

    ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது தோழியாக இருந்த சசிகலா அதிகார மையமாக வலம் வந்தார். இதனால் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் பெற்று இருந்தனர். தற்போது அத்தகைய நிலை இல்லை.

    இதனால் அ.தி.மு.க.வை மீண்டும் முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அவரது தென்மாவட்ட ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். இதற்கான நடவடிக்கைகளை சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

    இந்த கருத்தை வலியுறுத்தி இந்த மாத தொடக்கத்தில் தென் மாவட்ட தேவர் அமைப்புகளில் உள்ள மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது அ.தி.மு.க.வில் தங்கள் அமைப்புகளின் ஆதிக்கம் மீண்டும் இருக்க வேண்டும் என்று ஆலோசித்தனர். இதற்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதில் அந்த அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 100 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதை கடிதமாக தயாரித்து சசிகலாவிடமும், ஓ.பன்னீர்செல்வத்திடமும் கொடுத்து உள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு இந்த கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டன.

    அந்த கடிதத்தில் தேவர் அமைப்பு தலைவர்கள் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வை மீட்டு எடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். இதற்கு பொதுச்செயலாளர் (சசிகலா), ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்) இருவரும் ஒன்று சேர வேண்டும். இருவரும் கைகோர்த்து கட்சியை கைப்பற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது.

    ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான நீங்களும், உங்கள் விசுவாசியுமான ஓ.பன்னீர் செல்வமும் கைகோர்க்க வேண்டும். அதுதான் கழகத்தில் உள்ள 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாகும்.

    சென்னையில் ஜூன் 23-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும். இது அவருக்கு மட்டுமல்ல தேவர் இனத்துக்கே செய்யப்பட்ட அவமரியாதையாக கருதுகிறோம்.

    இதற்கு காரணமானவர்களை நாம் தோற்கடித்தே தீர வேண்டும். நம்மிடம் உள்ள துரோகிகளை வைத்து நம்மை வீழ்த்த நம் எதிரிகள் முயற்சி செய்கிறார்கள். இதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

    நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். நீங்கள் இருவரும் ரகசியமாக செயல்படுவதாக சொல்கிறார்கள். வெளிப்படையாக வாருங்கள். அவர்களது குற்றச்சாட்டுகளை உண்மை என்று நிரூபியுங்கள்.

    நீங்கள் இருவரும் கைகோர்த்தால் அது பலன் உள்ளதாக இருக்கும். உங்கள் ஒற்றுமை கட்சிக்கும், இனத்துக்கும் இந்த காலக்கட்டத்தில் அவசியமான ஒன்றாகும். கட்சியின் நலனுக்கு இது கை கொடுக்கும்.

    பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற்று பயணத்தை தொடங்குங்கள். உங்களுக்கு எதிராக வேறு யாரும் போட்டியாளர்களாக வர முடியாது. இது நிச்சயம்.

    நாகப்பட்டினத்தில் இருந்து திருநெல்வேலி வரையும், கோவையில் இருந்து வேலூர் வரையில் நீங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த கடிதம் தொடர்பாக சசிகலா தரப்பினரோ, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    Next Story
    ×