search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விடுமுறை தொடங்கியது- கொடைக்கானல், மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    விடுமுறை நாளை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கொடைக்கானல் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    கோடை விடுமுறை தொடங்கியது- கொடைக்கானல், மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • அரசு பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையோடு வகுப்புகள் முடிந்த நிலையில் பல்வேறு மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
    • கேரள மாநிலம் மூணாறு, தேக்கடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் விடப்பட்டது.

    அரசு பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையோடு வகுப்புகள் முடிந்த நிலையில் பல்வேறு மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் விடுமுறையை கொண்டாடினர். தற்போது காலை முதலே கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணமும், மதிய நேரத்தில் சாரல் மழையும் பெய்து வருகிறது. மலை முகடுகளை தழுவிச் செல்லும் மேகக்கூட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    இதே போல் கேரள மாநிலம் மூணாறு, தேக்கடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இங்கும் சாரல் மழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் மலை ஸ்தலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரம் அணி வகுத்து நின்ற வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் போராடினர்.

    எனவே மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×