search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடல் நீர் மட்டம் திடீர் தாழ்வு- விவேகானந்தர் மண்டபத்திற்கு தாமதமாக படகு போக்குவரத்து தொடக்கம்
    X

    கடல் நீர் மட்டம் திடீர் தாழ்வு- விவேகானந்தர் மண்டபத்திற்கு தாமதமாக படகு போக்குவரத்து தொடக்கம்

    • இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
    • திருவள்ளுவர் சிலைக்கு இதுவரை படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதில் பொதிகை படகு சின்னமுட்டம் துறைமுகத்தில் கரை ஏற்றப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் தற்போது குகன், விவேகானந்தா ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று காலை நீர்மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    இதனால் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. தற்காலிகமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடலின் தன்மை சகஜ நிலைமைக்கு திரும்பியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு பிறகு 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு இதுவரை படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    Next Story
    ×