search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாமிரபரணி நதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு
    X

    தாமிரபரணி நதியில் அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடந்த போது எடுத்தபடம்

    தாமிரபரணி நதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

    • முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு, நதிக்கு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது.
    • தாமிரபரணியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    வைகாசி விசாகம் அன்று தான் தாமிரபரணியை அகத்தியர் தனது கமண்டல நீரில் இருந்து பொதிகைமலையில் விட்டு நதியை ஓடச் செய்தார் என்று தாமிரபரணி மகாத்மியம் கூறுகிறது. தாமிரபரணி நதி பரணி என போற்றப்பட்டாலும் வைகாசி விசாக நட்சத்திரத்தில் தோன்றியவள் என்ற கூற்றும் தாமிரபரணி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தாமிரபரணி நதி

    எனவே தான் வைகாசி விசாகம் தாமிரபரணி நதியில் பெருமையாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் தான் குபேரன் தாமிரபரணி நதியில் மூழ்கி தனது இழந்த பொருளை மீட்டார். நம்மாழ்வார் பிறந்தது இந்த தினத்தில் தான். முருகப்பெருமான் அவதாரமும் வைகாசி விசாகத்தில் தான் நடைபெறுகிறது. இந்தநாளில் தாமிரபணியில் எங்கு குளித்தாலும் 12 வருடத்துக்கு ஒரு முறை கும்பகோணம் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிட்டுகிறது.

    இந்த பெருமை கொண்ட தாமிரபணிக்கு பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தாமிரபரணி நதிக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் பல்வேறு பூஜை நடைபெற்றது. இந்த வருடம் மழை வேண்டியும் தாமிரபரணி கரையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    சிறப்பு பூஜை

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு, நதிக்கு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது. இதையொட்டி தாமிரபரணி நதிக்கரை அருகே உள்ள முத்தாலங்குறிச்சி வீரபாண்டிஸ்வரர் என்ற முகில் வண்ணநாதர், முக்குறுணி அரிசி பிள்ளையார், லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

    அதன்பின் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்று நடப்பட்டது. அதைதொடர்ந்து முத்தாலங்குறிச்சி நல்ல பிள்ளைபெற்ற குணவதியம்மன் கோவிலில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. பின் கோவிலில் இருந்து கும்பம் எடுத்து ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிசேகங்கள் செய்து கும்பநீரும் ஊற்றி அபிசேகம் செய்யப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட மழை வேண்டி ஆராதனை நடந்தது.ஸ்ரீவை குண்டம் அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி தலைமை தாங்கி பூஜைகளை நடத்தினார். நிகழ்ச்சியில் அறங்காவலர்குழு தலைவர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சுடலைமணி, வள்ளிநாதன், கிராம உதயம் தொண்டு நிறுவன மேல ஆழ்வார் தோப்பு மேலாளர் வேல்முருகன், செய்துங்க நல்லூர் பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன், ஊர் பிரமுகர்கன் லெட்சுமணன், பிச்சகண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள் சேகர், சுந்தரகம்பர், சிவா ஆகியோர் செய்திருந்தனர். தாமிரபரணியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    முத்தாலங்குறிச்சி சிவன் பெயர் முகில்வண்ணநாதர். இவர் மழைக்கு அதிபதி. எனவே இந்த கோவிலுக்கு பூஜை நடந்தது. மேலும் தாமிரபரணியில் தாமிரபரணிநதி குணவதி என்ற நல்லபிள்ளை பெற்ற அம்மன் கோவில் முன்பாக வந்து திரும்புகிறது. எனவே இந்த இடம் முக்கிய தீர்த்தக்கட்டமாக கருதப்படுகிறது. எனவே மழை வேண்டியும் தாமிரபரணி பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

    Next Story
    ×