search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

    ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்

    • மாவட்ட அளவில் குறை கேட்டு முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
    • முகாம் வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த விரிவான அறிவுரைகள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு வேலை அடையாள அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்று திறனாளிகள் அனைவருக்கும் பிரத்தியேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 7829 மாற்று திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் குறை கேட்டு முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த முகாம் வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற வேலை அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×