search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிகரெட் நிறுவன ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பு
    X

    சிகரெட் நிறுவன ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பு

    • காரைக்குடி அருகே சிகரெட் நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ. 11 லட்சம் பறித்த கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பல்வேறு இடங்களுக்கு சென்று சிகரெட் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்து கொண்டு மாலை புதுவயலில் இருந்து காரைக்குடி நோக்கி வந்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி செக்காலை சாலையில் சிகரெட் மொத்த விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்குடி காந்திபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 30), மாதவன் நகரைச் சேர்ந்த தமிழரசன் (27) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று விக்னேஷ் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சிகரெட் வினியோகம் செய்யவும், ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்ட கடைகளில் பணம் வசூல் செய்வதற்காகவும் வேனில் புறப்பட்டார். வேனை தமிழரசன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சிகரெட் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்து கொண்டு மாலை புதுவயலில் இருந்து காரைக்குடி நோக்கி வந்தனர். கோட்டையூர் அருகே வந்தபோது காரில் வந்த 5 பேர் கும்பல் இவர்கள் சென்ற வேனை வழிமறித்து டிரைவர் தமிழரசனை தாக்கியது. மேலும் விக்னேஷை அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த ரூ. 11 லட்சத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த விக்னேஷ், தமிழரசன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த நபர்களை தேடி வந்தனர்.

    3 பேர் கைது

    இதில் இந்த கொள்ளை யில் ஈடுபட்டவர்கள் கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (25), கிஷோர்குமார் (22), காரைக்குடியைச் சேர்ந்த அன்வர்சலாம் (24) உள்பட 9 பேர் என்று தெரியவந்தது. இதில் தனிப்படை போலீ சார் முனீஸ்வரன், கிஷோர் குமார், அன்வர்சலாம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட 6 பேரை தேடி வருகின்றனர். கைதான அன்வர்சலாம் அதே சிகரெட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியர் ஆவார்.

    Next Story
    ×