search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் அரையாண்டு விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு

    • தமிழகத்தில் அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதியுடன் முடிவடைந்தது.
    • அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இறைவணக்கத்துடன் தொடக்கம்

    தேர்வு முடிந்து டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை மாவட்டத்தில் இன்று அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பானது சிறப்பு இறைவணக்கத்துடன் தொடங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகளையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஏராளமான மாணவ-மாணவிகள் இன்று அவசரம் அவசரமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வரவேண்டி இருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் பெரும்பாலான பள்ளிகளில் காலை 10 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

    புத்தகங்கள்

    பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்பேரில் ஏற்கனவே 6 மற்றும் 7-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. அவற்றை நாளை முதல் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேநேரத்தில் அரசின் எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் செல்வதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் இன்று முதலே 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.

    Next Story
    ×