பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம். முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

கல்வி உதவிதொகை

மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம்.

2023-24 நிதி யாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்கள்) பெற்றோர், அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். பள்ளிகளில் 9 அல்லது 11 - ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

10-ந்தேதிக்குள்...

9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் (YASASVI Entrance Test) தேர்ச்சி பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு 10.08.2023 க்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு

எழுத்துத் தேர்வு 29.09.2023 -ம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com