என் மலர்
உள்ளூர் செய்திகள்

பார்த்திபன், அகமது ஜாப்ரின் அலி
ரூ.37 ஆயிரம் லஞ்சம்- கிராம நிர்வாக அதிகாரிக்கு வலைவீச்சு
- மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
- தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் தலைமறைவானார்.
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா குமிழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்திற்கு பட்டா பதிவு மாற்றம் செய்வதாக பகவதிமங்கலம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபனை சந்தித்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் ரூ.37 ஆயிரம் தனக்கு லஞ்சமாக தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார். இதையடுத்து அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.37 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் கிராம நிர்வாக அலுவலர் கூறியதன் அடிப்படையில், ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள இ சேவை மைய உரிமையாளர் அகமது ஜாப்ரின் அலியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






