என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூரில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளை
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூரில் உள்ள திருக்கோவிலூர் ரோட்டில் வசிப்பவர் சிவச்சரண் (வயது 42). இவர் விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.நேற்று மாலை வீட்டிற்கு வந்த சிவச்சரண், வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற போது மர்மநபர் ஒருவர் பின்பக்க கதவு வழியாக தப்பியோடினார். இவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர் தப்பிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த பீரோவை பார்த்தபோது அதில் ஒரு பையில் வைத்திருந்த ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் சிவச்சரண் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபரை திருவெண்ணைநல்லூர் போலீசார் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் உள்ள இடத்தில் வீடுகள் நிறைந்த பகுதியில், பகல் நேரத்தில் ஒரு வீட்டில் புகுந்த மர்மநபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






