என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவிக்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பிவிட்டு வாலிபர் தற்கொலை
- உன் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உருக்கம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 35). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவருக்கு பிரியா( 28) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
சிவானந்தத்திற்கு வேலை செய்யும் இடத்தில் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து நெமிலி அருகே ஒருவரிடம் மாத சீட்டு கட்டி வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீட்டு பணத்தை எடுத்து இருவரும் ஆளுக்கு பாதி என பிரித்துக் கொண்டதாக தெரிகிறது. பிறகு மாதம் தோறும் சீட்டு பணம் கட்டுவதற்கு உரிய பங்கு பணத்தை மோகன் தராமல் இழுத்து அடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிவானந்தம் தனது நண்பரான மோகனுக்கு மனைவிக்கு தெரியாமல் வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதையும் அவர் சரிவர கட்டவில்லை இந்த நிலையில் சிவானந்தம் தீபாவளி பண்டிகையில் இருந்து மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் சிவானந்தம் யாரிடமும் சொல்லாமல் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரியா கணவரை காணவில்லை என்று நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்று காலை நெமிலி அடுத்த அச நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிவானந்தம் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் சிவானந்தம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான வீடியோ
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிவானந்தம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு முன்பு தனது மனைவி பிரியாவுக்கு உருக்கமான வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் என்னை மன்னித்துவிடு .வாழ எனக்கு தகுதி இல்லை .நீ எவ்வளவு சொல்லியும் நான் உன் பேச்சை கேட்கவில்லை. உன் பேச்சைக் கேட்டு இருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது.
நான் இறந்த பிறகு நான் பட்ட கடனை எப்படியாவது அடைத்து விடு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.






