என் மலர்
உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேர் கைது
- வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்
- பொதுமக்கள் சாலை ஓரத்திலேயே கூடியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே லாலாபேட்டை, முகுந்தராயபுரம் ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கிடையே கடந்த சில மாதங்களாக ஊராட்சி எல்லை உள்பட சில பிரச்சனைகள் நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க.ஒன்றிய செயலாளருமான அக்ராவரம். முருகன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் லாலாபேட்டையில் தி.மு.க கட்சி கொடி ஏற்றுவதற்காக சென்றபோது, லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து லாலாப்பேட்டையிலும், முகுந்தராயபுரம் ஊராட்சி அக்ராவரம் பகுதியிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவ்வாறு 2 ஊராட்சி பகுதியிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பொதுமக்கள் சாலை ஓரத்திலேயே கூடியிருந்ததால் இரு ஊராட்சிகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மறியலில் ஈடுபட கூடியிருந்தவர்களை கைது செய்தனர்.
இதில் லாலாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோகுலன் உள்பட 18 பேரும், முகுந்தராயபுரம் ஊராட்சி அக்ராவரம் பகுதியை சேர்ந்த 17 பேரும் என இரு தரப்பை சேர்ந்த மொத்தம் 35 பேரை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






