சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை

கீழக்கரையில் சேதமான சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கைவினையாளர்கள் சங்கம் சார்பில் ஊர்மக்கள் கையெழுத்திட்ட மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.
சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை
Published on

கீழக்கரை

திருப்புல்லாணி ஒன்றியம் மேதலோடையில் இருந்து வண்ணாங்குண்டு செல்லும் 4 கி.மீ., சாலை சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக பனைத்தொழிலாளர் மற்றும் கைவினையாளர்கள் சங்கம் சார்பில் வட்டார தலைவி கலைவாணி, காமாட்சி உள்ளிட்ட பெண்கள் ஊர்மக்கள் கையெழுத்திட்ட மனுவை கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மேதலோடை மற்றும் அருகில் உள்ள காடுகாரன்வலசை, ஈசுப்புலி வலசை, மாரி வலசை, பன்னிவெட்டி வலசை, உமையன் வலசை, மேதலோடை (வடக்கு), அய்யனார்புரம் ஆகிய 8 கிராமங்களில் 450 குடும்பங்களை சேர்ந்த 2000 பேர் வசிக்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

10-ம் வகுப்பிற்கு மேல் எங்கள் ஊரில் இருந்து 4 கி.மீ., ல் உள்ள வண்ணாங்குண்டு அரசு மேல்நிலை பள்ளிக்குதான் செல்ல வேண்டும். அங்கு 150 மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த பள்ளிக்கு மேதலோடை (தெற்கு) பகுதியில் இருந்து வண்ணாங்குண்டு செல்லும் 4 கி.மீ., சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த வழியாக பள்ளி செல்ல பஸ் வசதியும் இல்லை. இதனால் சாலையில் மாணவர்கள் நடந்தும், சைக்கிளில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு காயமடைகின்றனர்.

இந்த சாலையை உடனடியாக சீரமைத்து பஸ் வசதி செய்ய வேண்டும். தினைக்குளத்தில் உள்ள மேதலோடை துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com