search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமான விதைகளை சேமித்து கொள்ள வேண்டும்-வேளாண் அதிகாரி தகவல்
    X

    தரமான விதைகளை சேமித்து கொள்ள வேண்டும்-வேளாண் அதிகாரி தகவல்

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை விரயமின்றி சேமித்து கொள்ள வேண்டும்.
    • இந்த தகவலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதை சேமிப்பு என்பது விதை அறுவடை செய்த காலம் முதல் அடுத்த பருவத்திற்கு நடவு செய்யும் காலம் வரை அதிகபட்ச முளைப்புத்திறன், புறத்தூய்மை மற்றும் வீரியம் ஆகியவற்றை பராமரித்தலே விதை சேமிப்பின் முக்கிய நோக்கமாகும். விதை உற்பத்தியில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு விதைகளை பூச்சி மற்றும் நோய்களிங் இருந்து பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடை பணி முடிவுற்ற நிலையில் விதைகளை அதன் விதைப்பு பருவம் வரை தங்களது இடங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் விதைகளில் ஈரப்பதம் 13 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அவைகள் எளிதில் பூச்சி நோய் தாக்குதலுக்கு உட்படுகிறது.

    இதனால் விதைகளின் தரம் பெரிதும் பாதிக்கப் படுகிறது. விதைகளை பாதுகாக்கும் முறைகள்:-

    விதைகளை சேமிக்க புதிய கோணிப்பைகள் அல்லது சுத்தமான தீவன சாக்குகளை பயன்படுத்த வேண்டும். விதை சேமிக்கும் குதிர்கள் மற்றும் கிடங்கு களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குப்பைகள், தூசிகள், பூச்சி தாக்கப்பட்ட விதைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

    ஈரப்பதத்தை அந்தந்த விதைகளின் தன்மைக்கு தகுந்தாற் போன்று 9 முதல் 13 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு காயவைத்து விதைகளை நொச்சி அல்லது வசம்பு கிழங்குகளை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து சேமிக்க வேண்டும். வேதியியல் முறையில் 1 கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் கால்சியம் குளோரைடு கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்பு தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை பயன்படுத்தி விதையை சேமித்து வைக்க வேண்டும்.

    விதை மூட்டைகளை சீரான காற்றோற்றத்துடன் தரையில் அடுக்காமல் கட்டைகளின் மேல் அடுக்க வேண்டும். சுவற்றில் இருந்து 1 அடி இடைவெளி விட்டும் ஒரு அட்டியிலிருந்து மற்றொரு அட்டிக்கு 6 அடி இடைவெளி விட்டும் அடுக்க வேண்டும்.ஒரு அட்டியில் மூட்டைகளை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைக்கும் போது 6 மூட்டைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    15 நாட்களுக்கு ஒருமுறை மூட்டைகளில் பூச்சி தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட யுக்திகளை கையாண்டு தரமான விதைகளை சேமிப்புக்கால இழப்பு இல்லாமல் சேமித்து வைத்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×