என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை
- அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- திற்பரப்பில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் ஓரளவு நிரம்பி உள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் தண்ணீர் அதிக அளவு உள்ளதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி பகுதிகளில் பயிர் நடவு பணி நடந்து வருகிறது.
அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. காலை 9 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது. தக்கலை, இரணியல், குலசேகரம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை நீடித்தது.
திற்பரப்பில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.96 அடி யாக இருந்தது. அணைக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.30 அடியாக உள்ளது. அணைக்கு 307 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.






