என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு
- மணமேல்குடி, ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்
- உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, குறைகள் ஏதேனும் உள்ளதா? என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்
புதுக்கோட்டை,
மணமேல்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை உள்ளதாகவும், மருத்துவமனை சுகாதாரமற்று இருப்பதாகவும் மணமேல்குடி வர்த்தக நல சங்கத்தினர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மணமேல்குடி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வர்த்தக நல சங்க நிர்வாகிகளிடம் குறைகள் அனைத்தும் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மணமேல்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, வர்த்தக சங்க தலைவர் கணேசன், வணிகர் சங்க நிர்வாகி சாமியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதேபோல் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, குறைகள் ஏதேனும் உள்ளதா? என நோயாளிகளிடமும், போதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா? என டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வில் ஆவுடையார்கோவில் தாசில்தார் மற்றும் மருத்துவத்துறையினர், வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.






