என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரண்டு விசைப்படகுகள் மீது வழக்கு
- கோட்டைபட்டினத்தை சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
- 5 நாட்டிக்கல்லுக்கு குறைவான தூரத்தில் மீன் பிடித்ததால் மீன்வளத்துறை நடவடிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில் இதே பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்படகுகள் உள்ளன. விசைப்படகுகள் கடலுக்குள் 5 நாட்டிக்கல் அப்பால் சென்று தான் மீன்பிடிக்க வேண்டும். 5 நாட்டிக்கல் கீழ் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என்பது இந்திய மீன் பிடிச்சட்டத்தின் விதியாகும்.
இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விசைப்படகுகள் 5 நாட்டிக்கல் கீழ் மீன் பிடிக்கிறார்கள் என்றும், இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் புகார் பெறப்பட்டதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் அதிகாரிகள் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 2 விசைப்படகுகள் கரைப்பகுதியில் மீன்பிடித்தது தெரிய வந்தது. தொடர்ந்து 2 விசைப்படகு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மறுபடியும் கரைப்பகுதியில் மீன் பிடித்தால் விசைப்படகு மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.






