என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறுதி சடங்கில் தகராறு - 3 பேர் கைது
புதுக்கோட்டை விராலிமலை தாலுகா கல்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சித்திரை கண்ணன் மகன் தீபன்சக்கரவர்த்தி (வயது 23). இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ந்ேததி அன்று கல்குடியில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக இவரது வீட்டின் வழியாக எடுத்துச் சென்றனர். இறந்தவரின் உறவினர்கள் தீபன் சக்கரவர்த்தி வீட்டின் அருகே உள்ள மரத்தில் வெடி வைக்க வந்தனர். அப்போது தீபன் சக்கரவர்த்தி, குழந்தை தொட்டிலில் தூங்குகிறது எனவே வெடி வைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர், சரத்குமார், சத்தியமூர்த்தி, சரண்ராஜ், பாண்டி, சண்முகம் ஆகிய 6 பேரும், தீபன் சக்கரவர்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கல்லால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அருகிலிருந்த தண்ணீர் தொட்டியையும் அந்த 6 பேரும் அடித்து உடைத்துள்ளனர். அதில் தீபன் சக்கரவர்த்தி, மற்றும் மகாதேவன் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தீபன் சக்கரவர்த்தி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், பாண்டி, சத்தியமூர்த்தி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






