search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; நெல்லை மாவட்டத்தில் 13.51 லட்சம் வாக்காளர்கள்- ஆண்களை விட பெண்கள் அதிகம்

    • வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
    • மாவட்டத்தின் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் 13,51,178 வாக்காளர்கள் உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.

    கலெக்டர் வெளியிட்டார்

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், பயிற்சி கலெக்டர் கோகுல், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி காசி மணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் சிந்து முருகன், காங்கிரஸ் சார்பில் சொக்கலிங்க குமார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக 7,722 பேர் சேர்ப்பு

    5.1.2022-ன் படி நெல்லை மாவட்டத்தில் 13,86,140 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு நெல்லை தொகுதியில் 1,374 பேரும், அம்பையில் 1,241 பேரும், பாளையில் 2,059 பேரும், நாங்குநேரியில் 1,779 பேரும், ராதாபுரத்தில் 1,269 பேரும் என புதிதாக 7,722 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதே போல் 42 ஆயிரத்து 684 பேர் நீக்கப்பட்டும், 5,283 பேர் திருத்தம் செய்யப்பட்டும், 1,006 பேர் முகவரி மாற்றமும் செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி மாவட்டத்தின் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் 13,51,178 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6,61,503 பேர் ஆவர். பெண்கள் 6,89,557 பேர் ஆவர். 3-ம் பாலினத்தவர் 118 பேர் ஆவர்.

    வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    சிறப்பு முகாம்

    வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதனை பார்த்து பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை ஆன்-லைன் மூலமாகவும், நேரடியாகவும் செய்து கொள்ளலாம்.

    இதற்காக இந்த மாதம் 12,13,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை 51.76 சதவீதம் பேர் இணைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×