search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிரான மனு- இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டு மறுப்பு
    X

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிரான மனு- இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டு மறுப்பு

    • ஆன்லைன் சூதாட்டம் காரணமாக 32 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது.
    • ரம்மி திறமைக்கான விளையாட்டு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு இயற்றப்பட்டு உள்ள இந்த சட்டம் செல்லுபடியாகும். பொது அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

    ஆன்லைன் சூதாட்டம் காரணமாக வேலையில்லா இளைஞர்கள், தினக்கூலிகள் ஆட்டோ டிரைவர்கள் என 32 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, 'ரம்மி திறமைக்கான விளையாட்டு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநில அரசுகள் ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த சட்டத்தை அந்தந்த மாநில ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதனை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகளில் எந்த இடைக்கால உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கவில்லை.

    தற்போது ஆன்லைன் விளையாட்டுகளை அதிர்ஷ்ட விளையாட்டு எனவும், அதற்கு பலர் அடிமையாகி நிதி இழப்புகளை சந்தித்து தற்கொலைகள் செய்து கொள்வதாகவும் கூறி ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் கடுமையான குற்ற நடவடிக்கைகளை எடுக்கும்வகையில் இருப்பதால் இந்த சட்டம் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றார்.

    இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், 'ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தடை கோரி நீண்ட நேரம் வாதிடப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் அந்த வாதத்தை ஐகோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. எனவே, இறுதி விசாரணைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும்' என வாதாடினார்.

    இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள் இறுதி விசாரணைக்காக 13-ந் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

    Next Story
    ×