search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி- ஆனைமலை போலீஸ் நிலையங்களில் ஒரேநாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
    X

    பொள்ளாச்சி- ஆனைமலை போலீஸ் நிலையங்களில் ஒரேநாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்

    • வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்
    • போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தி பெற்றோரை காவல் நிலையம் வரவைத்தனர்

    கோவை,

    பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் யதுகிருஷ்ணன் (வயது 25). இவர் தனியார் லாட்ஜியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கன்னித்தமிழ் (26). கல்லூரி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர். அவர்கள் கடந்த 2 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன் படி கன்னித்தமிழ் கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் யதுகிருஷ்ணனுடன் சேர்ந்து ஜோதி நகர் விநாயகர் கோவில் வைத்து இருவரும் திருமணம் செய்தனர்.

    பின்னர் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களின் பெற்றோரை போலீசார் பேச்சு வார்த்தைக்காக அழைத்துள்ளனர்.

    இதேபோல ஆனைமலை அருகே சித்தூரை சேர்ந்த வர் தினேஷ் குமார் (26). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (20). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் கடந்த 2 ½ வருடங்களாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, காங்கயம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

    ஒரேநாளில் பொள்ளாச்சி, ஆனைமலை போலீஸ்நிலையங்களில் 2 காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×