என் மலர்
உள்ளூர் செய்திகள்

உள்ளாட்சி துறை ஊழியர்கள் சாலை மறியல்
- பெரம்பலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்.
- மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன், செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். பின்னர் ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் திடீரென்று பஸ் நிலையம் முன்பு உள்ள சாலைக்கு ஓடி வந்து அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மாவட்ட கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், 8 மணி நேர வேலை, வார விடுப்பு, பண்டிகை கால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை (இ.எஸ்.ஐ.) அடையாள அட்டை, ஊதிய சீட்டு, பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 105 பேரை கைது செய்தனர்.






