search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள  கல்குவாரியை தடை செய்ய கோரி மனு
    X

    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கல்குவாரியை தடை செய்ய கோரி மனு

    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கல்குவாரியை தடை செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது.
    • மொத்தம் 235 மனுக்களை பெற்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், சித்தளி ஊராட்சிக்கு உட்பட்ட பீல்வாடி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள பீல்வாடி கல்குவாரியை தடை செய்ய வேண்டும்.

    மேலும் இது தொடர்பாக சித்தளி ஊராட்சி மன்றத்தில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே அந்த கல்குவாரியை தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

    பெரம்பலூர் தாலுகா செங்குணம் அருந்ததியர் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தங்களது கிராமத்தின் மலையடிவாரத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 235 மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தலா ரூ.34,272 மதிப்பீட்டில் 2 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எலக்ட்ரானிக் ப்ரெய்லி ரீடரினையும், தலா ரூ.5,560 மதிப்பீட்டில் 12 காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியினையும் கலெக்டர் வழங்கினார்.

    Next Story
    ×