search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னம் அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து பணம்கொள்ளை
    X

    குன்னம் அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து பணம்கொள்ளை

    • சண்முகமூர்த்தி ஊரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்
    • இன்று அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது மளிகைக்கடையுடன் இணைந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது கொளக்காநத்தம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகமூர்த்தி (வயது 63). இவர் அதே ஊரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதனையொட்டியே வீடும் அமைந்துள்ளது. மேலும் இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் மற்றொரு வீடும் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மளிகைக்கடை வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிய அவர் தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு மனைவி விஜயாவுடன் தூங்க சென்றார். இன்று அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது மளிகைக்கடையடன் இணைந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அதே பகுதியில் பக்கத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது ஓட்டு வீட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் சீனிவாசன் என்பவரது வீட்டில் ரூ.10 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். சீனிவாசன் கடந்த 24-ந்தேதி முதல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வீடு திரும்பிய நிலையில் திருட்டு சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

    ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர் திருட்டு தொடர்பாக மருத்துவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போலீசாரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×