என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை
- நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
- மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.அதில், 1962-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளியின் ஓட்டு கட்டிடத்தால் தற்போது மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அங்குதான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் அந்த ஓட்டு கட்டிடம் ஒழுகி மழைநீர் வகுப்பறையில் தேங்குகிறது. 61 ஆண்டுகள் பழமையான அந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டிக்கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.






