என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் 2 போலி டாக்டர்கள் கைது
- மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு
- மாத்திரை, மருந்து, ஊசிகள் பறிமுதல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் வி.கைகாட்டி பகுதியில் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோகன் மருந்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது வி.கைகாட்டி, ஆதித்யா கிராமம் குடியிருப்புக்கு எதிரே உள்ள அம்மன் மருந்து கடையில் போலீசார் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அந்த கடையை நடத்தி வந்த வெற்றியூர் அண்ணா நகர் காலனி தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி கலைச்செல்வி (வயது 34) என்பவர், உரிய அங்கீகாரம் இல்லாமலும், மருத்துவ படிப்பு படிக்காமலும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்து, மாத்திரை மற்றும் ஊசி ஆகியவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து, கலைச்செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இதேபோல தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாஜி (47) என்பவர் சிவப்பிரியா என்ற பெயரில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். அங்கு ஆய்வு நடந்த போது அவர், பொதுமக்களுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கி வருவதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த மருந்து, மாத்திரை, ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ராஜாஜி மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து உள்ளனர்.






