என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு இலவசமாக கொடுத்த நிலத்தில் போராட்டம் நடத்திய குடும்பத்தினர்.
அரசு இலவசமாக கொடுத்த நிலத்தில் பள்ளிக் கட்டிடம் கட்ட எதிர்ப்பு: போராட்டம்
- கடந்த 1968-ம் ஆண்டு கலைஞரின் ஆட்சி காலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
- இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில், பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு கடந்த 1968-ம் ஆண்டு கலைஞரின் ஆட்சி காலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது இருந்து வரதராஜன் மற்றும் அவருடைய வாரிசுகளின் பயன்பாட்டில் தான் அந்த இடம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில், பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜன், வாரிசுதாரர்கள் வீட்டுமனை வழங்கப்பட்ட இடத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வரதராஜன் குடும்பத்தினர் கூறுகையில், வாழ்வாதாரமின்றி தவிக்கும் எங்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கிய வீட்டுமனையில் அதிகாரிகள் கட்டிடம் கட்ட முயல்கின்றனர்.
இது எந்த வகையில் நியாயம்? இதனால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே அதிகாரிகள் இந்த நடவடிக்கை கைவிட வேண்டும்.
இல்லையெனில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






