நெல்லை வண்ணார்பேட்டையில் திறப்பு விழா காண்பதற்கு முன்பு இடிக்கப்பட்ட நிழற்குடை

நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், முருகன் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்ததன் காரணமாகவே அந்த பழைய நிழற்குடை இடிக்கப்பட்டு வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
நிழற்குடையை இடித்து அகற்றும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.
நிழற்குடையை இடித்து அகற்றும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், முருகன் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

அதனை சரி செய்வதற்கான தீர்வாக வண்ணார்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து வண்ணார் பேட்டையில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் முன்பு அமைக்கப்பட்டு இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பாளை சட்டமன்ற உறுப்பினரின் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றது. அதற்கான பணிகள் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்ததன் காரணமாகவே அந்த பழைய நிழற்குடை இடிக்கப்பட்டு வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் அதே இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது என்று மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் இன்று அந்த நிழற்குடையை திடீரென இடித்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த பஸ் நிலையத்திற்கு மாநகராட்சி சார்பில் எந்த விதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் தற்போது எதற்காக அந்த கட்டிடம் இடிக்கப்படுகிறது என்பதும் மாநகராட்சி நிர்வாகத்தில் யாருக்கும் தெரியாது என்று கை விரித்து விட்டனர்.

அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்த அந்த நிழற்குடை திறப்பு விழா காண்பதற்கு முன்பாகவே அகற்றப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com