search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் அருகே ரூ.85 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையம்
    X

    குன்னூர் அருகே ரூ.85 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையம்

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.
    • தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்காகவும் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காகவும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் அவ்வப்போது உரிய நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் ராதிகா சாஸ்திரி, சார்லஸ் நாதன், ஜான், விபின், மற்றும் பொறியாளர் ஜான்சன் ஆகியோர் குழுவாக சேர்ந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பு இன்றி இருந்த சுகாதார நிலையத்தை ரூ.85 லட்சம் மதிப்பில் புதுப்பித்து சுகாதார நிலையத்துக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும், மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்கள் மட்டுமின்றி அவசர சிகிச்சைக்கான வார்டுகளும் மற்றும் பிரசவ வார்டுகளும் அமைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உட்பட 57 கிராமங்கள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் பேர் இந்த மருத்துவமனையால் பயனடைவார்கள். இதனை கட்டிக் கொடுத்த தன்னார்வ லர்களுக்கு வாழ்த்துக்க ளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஊட்டியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 150 பேர் வீதம் மூன்று ஆண்டுகளில் 450 மருத்துவர்கள் பயிற்சி பெற்று செல்கின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், தாசில்தார் கனிசுந்தரம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    Next Story
    ×