search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் -திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
    • கோவில் யானை காந்திமதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடிபட்டம் கோவில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

    சிறப்பு பூஜைகள்

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தாக்கத்தின் காரணமாக ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோவிலுக்குள் மட்டும் வைத்து உள்திருவிழாவாக நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கஜ பூஜை, கோபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தங்க பூங்கோவில் சப்பரத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    கொடியேற்றம்

    அதனைத் தொடர்ந்து கோவில் யானை காந்திமதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடிபட்டம் கோவில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது.

    திருக்கல்யாணம்

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி திருக்கல்யாணத்தின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான கம்பா நதியில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 22-ந்தேதியும், திருக்கல்யாண உற்சவம் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வருகிற 23-ந்தேதி அதிகாலையும் நடைபெறுகிறது.

    Next Story
    ×