என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
நீர்வள ஆதாரத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்ராஜா வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் விட விவசாயிகள் எதிர்ப்பு
- தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ராஜா வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் விடுவது சம்பந்தமாக விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு நாமக்கல் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சரபங்கா வடிநில கோட்ட பிரிவு அலுவலகத்தில், தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ராஜா வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் விடுவது சம்பந்தமாக விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நாமக்கல் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சுரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நீரேற்று பாசன சங்கங்கள் முறையற்ற முறையில் தண்ணீர் எடுப்பதை நிறுத்தாவிட்டால் ராஜா, பொய்யேரி, கொமரபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்களில் முறை வைத்து தண்ணீர் விடும் பாசன முறையை அமுல்படுத்த கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முறை வைத்து தண்ணீர் விடும் பாசன முறையை அமல்படுத்தினால் மோகனூர் ராஜாவாய்க்காலில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ராஜா, பொய்யேரி, கொமராபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகளின் நலன் கருதி முறை வைத்து தண்ணீர் விடும் முடிவை பொதுப்பணித்துறையினர் கைவிட வேண்டும்.
காவிரி ஆற்றின் கீழ் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தாமதம் ஏற்படுவதால் காவிரி ஆற்றில் குறுக்கே மணல் எடுப்பதற்காக போடப்பட்டுள்ள மணல் தடுப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆலோசனை கூட்டத்தில் வேலூர் ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வையாபுரி, செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் வையாபுரி, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் அஜித்தன், மோகனூர் விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் வரதராஜன், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






