search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அயர்ந்து தூங்கிய உரிமையாளர்கள்-25 பவுன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்
    X

    அயர்ந்து தூங்கிய உரிமையாளர்கள்-25 பவுன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்

    • சாமிநாதனின் தாயார் வீட்டிற்குள் மர்மநபர் இருட்டில் ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை ராக்கிப்பாளையம் அருகே உள்ள வெற்றி லைகாளி பாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்தார். அறையில் படுத்து இருந்த சாமிநாதனின் தாயார் வீட்டிற்குள் யாரோ மர்மநபர் இருட்டில் ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

    தாயின் அலறல் சத்தம் கேட்டு சாமிநாதன் வெளியே வந்து பார்த்தார். வீட்டிற்குள் யாரும் இல்லை. அறையில் இருந்த பீரோவை பார்த்த போது அது பூட்டி இருந்ததால் அனைவரும் தூங்க சென்றனர்.

    மறுநாள் காலையில் சாமிநாதன் பீரோவை திறந்து பார்த்தார். அதில் இருந்த செயின், மோதிரம், கைசெயின், கம்மல் உள்பட 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. அதனை வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் ஆட்கள் இருக்கும் போது அத்துமீறி நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×