search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசின் சிறப்பான பணி காரணமாக ஜவுளி பூங்காவை தமிழகம் பெற்றுள்ளது - மந்திரி பியூஷ் கோயல்
    X

    மத்திய மந்திரி பியூஷ் கோயல்

    தமிழக அரசின் சிறப்பான பணி காரணமாக ஜவுளி பூங்காவை தமிழகம் பெற்றுள்ளது - மந்திரி பியூஷ் கோயல்

    • இந்தியாவில் 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைய உள்ளன.
    • இதில் முதல் ஜவுளி பூங்கா என்ற பெருமையை விருதுநகர் ஜவுளி பூங்கா பெற்றுள்ளது.

    சென்னை:

    பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) தமிழகத்தின் விருதுநகரில் அமைய உள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இப்பூங்காவில் தொழில் தொடங்குவதற்கு 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும் என மொத்தம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடக்க விழாவில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:

    இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஜவுளித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மெகா ஜவுளி பூங்காவை பெற இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. தமிழக அரசின் சிறப்பான பணி காரணமாக ஜவுளி பூங்காவை தமிழகம் பெற்றுள்ளது.

    விவசாயத்துக்கு அடுத்தபடியாக 4 கோடி பேருக்கு நேரடியாகவும், 6 கோடி பேருக்கு மறைமுகமாகவும் ஜவுளித்துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஜவுளிக்கான நூலை உருவாக்குவது, ஆடையாக உருவாக்குவது, வடிவமைப்பது, ஏற்றுமதி செய்வது என ஜவுளித்துறை பணிகள் பல்வேறு கட்டங்களாக நடக்கின்றன. அதுவும் வெவ்வேறு இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரே இடத்தில் கொண்டு வரும்போது ஆடையை உருவாக்குவதற்கான செலவு வெகுவாகக் குறையும். அதேநேரத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

    இதனை கருத்தில் கொண்டுதான் இதுபோன்ற பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 7 பூங்காக்கள் மூலம் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி முதலீடுகளை பெறமுடியும். இதுதவிர 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஜவுளி பூங்கா அமைய இருப்பது அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.

    அதேபோன்று, இந்த ஜவுளி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியையும், என்னையும் அழைப்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×