என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
    • உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன, ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும், அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மற்றபடி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை.

    பொதுக்கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

    சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் பி. எம் ஸ்ரீதர், மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஞானஇமய நாதன், இளையபெருமாள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள் அலுவலர்கள் என ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.

    • கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
    • அறிவழகனின் உறவினர்கள் மற்றும் சீப்புலியூர் கிராம மக்களும், பா.ம.க. வினரும் திரண்டு வந்து அறிவழகனின் உடலை எடுக்கவிடாமல் தடுத்ததுடன், கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றப்பட்ட வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே ஆதனூர் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1064 மீட்டர் தூரத்திற்கு ரூ.465 கோடி மதிப்பில் கதவணை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கதவணை கட்டுமான பணியில் சீபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் அறிவழகன் (வயது 35) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் கதவணை கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சற்று தூரத்தில் கொள்ளிடம் ஆற்றில் அறிவழகன் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அறிவழகன் உடலை கைப்பற்றியதுடன் அணை கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரையும் விசாரணைக்காக போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அறிவழகனின் உறவினர்கள் மற்றும் சீப்புலியூர் கிராம மக்களும், பா.ம.க. வினரும் திரண்டு வந்து அறிவழகனின் உடலை எடுக்கவிடாமல் தடுத்ததுடன், கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றப்பட்ட வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து 3 மணிநேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்து வந்தது.

    அறிவழகனை ஜேசிபி வாகனத்தால் மோதி கொலை செய்து புதைத்துவிட்டு மறைப்பதாகவும், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அறிவழகன் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    அவர்களிடம் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜ்குமார், தாசில்தார் மகேந்திரன், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் உரிய இழப்பீடு தொகையை தருவதாக கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்டதாலும், விதவைகள் மறுவாழ்வு திட்டத்தில் அறிவழகன் மனைவிக்கு அரசு வேலை பெற்றுத் தர ராஜகுமார் எம்.எல்.ஏ, தாசில்தார் மகேந்திரன் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×