search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை ஆற்று தரைப்பாலத்தை திறக்க கோரிக்கை

    • வைகை ஆற்று தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    மதுரை

    மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய இடங்களில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை நகரில் முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலமாக மதுரை ஏ.வி. பாலம் உள்ளது. இந்த பாலத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதி வேகமாக செல்லக்கூடிய மோட்டர் சைக்கிள்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே இந்த பாலத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    சைக்கிள்கள், டிரை சைக்கிள் உள்ளிட்டவை ஏ‌.வி. பாலம் அருகே உள்ள புது பாலத்தின் கீழ் உள்ள வைகையாற்று தரைப்பாலம் வழியாக அனுமதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை தரைப்பா லத்தில் போக்கு வரத்துக்கு திடீரென தடை விதித்து அங்கு கான்கிரீட் தடுப்புகளை அமைத்தது. இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    இதன் காரணமாக சுமை ஏற்றி செல்லும் டிரை சைக்கிள் தொழிலாளர்கள் எம்.ஜி.ஆர்‌ பாலத்தை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோரிப்பாளையம் பகுதியில் இருந்து வரும் டிரை சைக்கிள் நேரடியாக ஏ.வி‌ பாலம் வழியாக செல்கிறது. இதனால் அந்த பாலத்தில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்‌ சில நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    அதிக பாரத்துடன் டிரை சைக்கிள் தொழிலாளர்கள் பாலத்தை கடப்பது பெரும் சவாலாக உள்ளது. வைகை ஆற்று தரைப் பாலத்தை அடைத்துள்ளதால் அங்கு மக்கள் நடமாட்டம் குறைந்து சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் ரவுடிகள் அங்கு குவிந்து மது குடிப்பதும், பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு திட்டமிடும் இடமாகவும் வைகை ஆற்று தரைப்பாலம் மாறி வருகிறது.

    இந்த தரை பாலத்தை கான்கிரீட் தடுப்புச் சுவர் வைத்து அடைத்துள்ளதால் போலீசாரும் அந்த பகுதியில் ரோந்து செல்ல முடியவில்லை.

    நகரின் எந்தவித நெரிசலுமின்றி வாகனங்கள் சென்று வந்த வைகை ஆற்றை தரைப் பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் நேரடி நடவடிக்கை எடுத்து அந்த பாலத்தை போக்குவரத்துக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும் உடனே அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×