search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தர்ணா போராட்டம்
    X

    மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தர்ணா போராட்டம்

    • திருமங்கலம்-உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் ரத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தர்ணா போராட்டம் நடந்தது.
    • கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து அந்த கல்வி மாவட்டங்களை மீண்டும் செயல்பட வைக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. போராட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    சாமானிய மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காணும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு புதிய 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கினார். இதில் திருமங்கலமும் ஒன்று.

    இந்த புதிய கல்வி மாவட்டங்கள் உருவான தன் மூலம் மாணவ, மாணவி கள் மற்றும் ஆசிரியர்கள் பயடைந்து வந்தனர்.

    இது போன்ற கல்வி மாவட்டங்களை உருவாக்கியதின் மூலம் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகமானது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 80 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    இதில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    தற்போது தமிழக அரசின் சார்பில் 151 அரசாணை வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் செயலாகும். இது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

    எடப்பாடி பழனிசாமி 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கி சீர்திருத்த புரட்சி செய்த கல்வி மாவட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. யாரிடமும் கருத்து கேட்காமல் சர்வாதிகார போக்குடன் அரசு இந்த முடிைவ எடுத்துள்ளது.

    மீண்டும் ரத்து செய்யப்பட்ட கல்வி மாவட்டங்களை செயல்பட வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். எஸ். சரவணன், வெற்றிவேல் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×