search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி மதுரை கூடழலகர் பெருமாள் கோவில் ஏகாந்த சேவை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளித்த பெருமாளை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

    மதுரை

    புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதையொட்டி புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில், கள்ளழகர் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் அதிகாலை முதலே பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் வியாபாரம் சூடு பிடிக்கும். ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் விரதம் கடைபிடித்து வருகின்றனர். இதனால் மதுரையில் உள்ள இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக இருந்தது. ஒரு சிலர் மட்டும் வந்து இறைச்சி வாங்கிச் சென்றனர்.

    இது தொடர்பாக நெல்பேட்டை கோழி இறைச்சி வியாபாரி சாகுல் என்பவர் கூறுகையில், புரட்டாசி மாதத்துக்கு முன்பாகவே பிராய்லர் உரிமையாளர்கள் உற்பத்தியை குறைத்து விடுவர். எனவே நடப்பு மாதத்தில் கோழிக்கறி விலை குறைய வாய்ப்பு இல்லை. ஆனாலும் விற்பனை சரிவால் ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது. 15 பேர் வேலை செய்த இடத்தில் தற்போது 7 பேருக்கு மட்டுமே வேலை உள்ளது.

    கடந்த ஆவணி மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமாவாசை, கார்த்திகை போன்ற விசேஷ நாட்கள் வந்ததால் வியாபாரம் பாதித்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதமும் விற்பனையில் சரிவு இருக்கும். எனவே அந்த பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்றார்.

    மதுரை மாவட்டத்தில் இன்று விற்பனை செய்யப்பட்ட இறைச்சி விலை விவரம் வருமாறு:-

    எலும்பு இல்லாத ஆட்டு இறைச்சி (1 கிலோ) -ரூ. 700 , கால்- ரூ. 40, தலை-ரூ.240, மூளை-ரூ.480, இதயம்-ரூ.470, குடல்-ரூ.420.

    எலும்பு இல்லாத சிக்கன்- ரூ.210, உயிருள்ள கோழி-ரூ.130, கோழி ஈரல்-ரூ.110, தோல் உரித்த சிக்கன்-ரூ.190, முழு கோழி- ரூ.170, உயிருடன் உள்ள நாட்டுக்கோழி-ரூ.250, உரித்த நாட்டு கோழி- ரூ.350.

    சாளை மீன்- ரூ.200, பாறை மீன்-ரூ.250, ஊழி மீன்- ரூ.250, நகரை- ரூ.250, திருக்கை-ரூ.270, பண்ணா-ரூ.280, அயிரை- ரூ.300, நண்டு-ரூ.320, கெளுத்தி-ரூ.350, சங்கரா- ரூ.390, கிழங்கா-ரூ.430, இறால்-ரூ.600, வஞ்சரம்- ரூ.700.

    Next Story
    ×