search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
    X

    சேதமடைந்த ஏ.டி.எம். கருவி

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
    • ஏ.டி.எம். மைய அலுவலர்கள் வந்த பின்பு தான் எவ்வளவு பணம் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரிய வரும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ''இந்தியா ஒன்'' என்ற தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம் எடுக்கும் எந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து இன்று காலை ஆலம்பட்டி கிராம மக்கள் ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற போது பணம் எடுக்கும் கருவி உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையத்தை ஆய்வு செய்தனர். இதில் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி இருக்கும் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்களா? அல்லது மது போதையில் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் உடைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னரே இதுகுறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ஏ.டி.எம். மைய அலுவலர்கள் வந்த பின்பு தான் எவ்வளவு பணம் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் ஆலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×