என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளித்தலை அருகே தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் வீட்டில் ரூ.9 லட்சம், 31 பவுன் நகைகள் கொள்ளை
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சாவித்திரி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் குளித்தலை பகுதியில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் தாளாளராகவும் உள்ளார். தற்போது இவர்கள் தங்களது வீட்டை புதுப்பித்து கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கருணநிதி குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். பின்னர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு வந்தனர். பின்னர் நள்ளிரவில் அனைவரும் தூங்கச் சென்றனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் இவர்களது வீட்டின் பின்பகுதி வழியாக மர்ம 3 நபர்கள் நுழைந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு சென்றனர்.
சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அவரது இளைய மகள் பல் மருத்துவர் அபர்ணா விழித்து பார்த்தார். அப்போது 3 பேர் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். உடனே மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். சத்தம் கேட்டு கருணநிதி, சாவித்திரி ஆகியோர் அங்கு வந்தனர். உடனே கொள்ளையர்கள் அபர்ணாவை அரிவாளால் தாக்கினர். உடனே தாய் சாவித்திரி தடுத்தார். இதில் அபர்ணா, சாவித்திரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் கொள்ளையர் கத்தி, அரிவாள் முனையில் அங்கு இருந்த ரூ. 9 லட்சம் மற்றும் 31 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இது குறித்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என்பதற்காக அவர்கள் 3 பேரின் செல்போன்களையும் பறித்தனர். பின்னர் கொள்ளையர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி கருணாநிதி அக்கம்பக்கத்தினர் மூலமாக குளித்தலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர் தாக்கியதில் காயம் அடைந்தசாவ்த்திரி, அபர்ணாவை போலீசார் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா விரந்து வந்து விசாரணை நடத்தி னார். கொள்ளையர்கள் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட் வரை மோப்பம் பிடித்தபடி சென்று நின்று விட்டது.
குளித்தலை நகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள மையப் பகுதியில் அதிகாலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






