என் மலர்
உள்ளூர் செய்திகள்

நரசிம்மநாயக்கன்பாளையம் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
- காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து 108 பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம்
- நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து தரிசனம்
கவுண்டம்பாளையம்,
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக விக்கிரங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண விழா நடைபெற்றது.
நேற்று மாலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவிய பூஜை, வாஸ்துசாந்தி, ரக்ஷாபந்தனம், யாகசலா பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், மஹா பூர்ணாஹிதி, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு சூரிய கும்ப பூஜைகள், 2-ம்கால யாகபூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறப்பு, பெயர்சூட்டுதல் நடந்தது.
பின்னர் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்த மூலவர் வரசித்தி விநாயகருக்கு 108 பால் குடங்கள் மங்களஇசை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான மூலவர் வரசித்தி விநாயகருக்கும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட உற்சவ திருமேனிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து விநாயகரை தரிசித்தனர். தொடர்ந்து மகா அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.






