search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொருக்குப்பேட்டை ரெயில்வே மேம்பால பணி விரைவில் தொடக்கம்- போக்குவரத்து நெரிசலுக்கு மாநகராட்சி தீர்வு
    X

    கொருக்குப்பேட்டை ரெயில்வே மேம்பால பணி விரைவில் தொடக்கம்- போக்குவரத்து நெரிசலுக்கு மாநகராட்சி தீர்வு

    • ரூ. 96 கோடியில் 2 வழி பாதையாக அமைகிறது.
    • ரெயில்வே லெவல் கிராசிங்கில் மேம்பாலம் கட்ட மாநகராட்சி அனுமதியளித்து திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரெயில்வே பாதை, சுரங்கப் பாதை உள்ள இடங்களிலும் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்து டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.

    வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டும் அந்த பணிகள் தொடங்கி உள்ளன. ரூ.142 கோடி மதிப்பீட்டில் 4 வழி மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

    இதற்காக தற்போது அங்கு குடிநீர் குழாய்கள், மின்வாரிய கேபிள்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. இதற்கு தனி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கட்டுமானப்பணி தொடங்குவதற்கு ஏதுவாக மின் கேபிள்கள், குடிநீர் குழாய் லைன் மாற்றம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கொருக்குப்பேட்டையில் மற்றொரு ரெயில்வே மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்ட அனுமதி அளித்து நிதி ஒதுக்கியுள்ளது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு எழில்நகர் பகுதியில் இருந்து கொருக்குப்பேட்டை செல்லும் மணலி சாலையில் ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது.

    அந்த பகுதியில் ரெயில் செல்லும் போது கேட் போடப்படுவதால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எண்ணை நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய லாரிகள், கனரக லாரிகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரம் காத்து இருக்கின்றன. மோட்டார்சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் இந்த இடத்தில் காத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரெயில்வே கேட்டிற்கு முன் இருபுறமும் நிற்கும் வாகனங்கள் முந்தி செல்ல போட்டி போடுவதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

    சரக்கு ரெயில் எப்போதாவது ஒருமுறை இந்த பாதையில் சென்றாலும் அந்த நேரத்தில் 15 நிமிடத்திற்கு மேலாக அங்கு கேட் மூடப்படுவதால் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    சென்னை மாநகராட்சி 4-வது மண்டலம் 41-வது டிவிசனுக்கு உட்பட்ட மணலி சாலையில் ரூ.96.4 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முடிவு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. 840 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்க திட்ட வரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதனை சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் ஆய்வு செய்து அனுமதி அளிக்கும். இந்த மேம்பாலம் 2 வழி பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொருக்குப்பேட்டை ரெயில்வே லெவல் கிராசிங்கில் மேம்பாலம் கட்ட மாநகராட்சி அனுமதி யளித்து திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அங்கு பணிகள் தொடங்கப்படும்.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதற்கான செலவை மாநகராட்சி மேற் கொள்கிறது. ரெயில்வேக்கு சொந்தமான பகுதி செலவை ரெயில்வே ஏற்கிறது. இந்த ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால் மணலி பகுதிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்ல முடியும். தண்டையார் பேட்டை பகுதியில் இருந்து எளிதாக கொடுங்கையூர், மாதவரம், பெரம்பூர், மூலக்கடை, வியாசர்பாடி பகுதிகளுக்கு வர முடியும்.

    இந்த பணி முடிந்தவுடன் வைத்திலிங்க மேம்பாலம் அருகில் உள்ள ரெயில்வே லெவல் கிராசிங்கில் மேம் பாலம் கட்டப்படும். இந்த பாலமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. வாகனங்கள் எளிதாக கொருக்குப்பேட்டை, மணலி பகுதிகளுக்கு செல்ல முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×