என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டிட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த 15 பேர் கைது
கரூர்
கரூர் அரசு காலனியில் ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பில்டர்ஸ் நிறுவனம் 80 வீடுகளை கட்டி விற்பனை செய்தது.
கட்டிய வீடுகள் யாவும் தரமற்று இருப்பதாகவும் வீடுகளை உடன் சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கையோடு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழக முதல்வர், கரூர் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் கரூர் ஆர்.டி.ஓ. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளை பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.
இப்பகுதியில் தார் சாலைகள் அமைக்கப்படவில்லை, சாக்கடை வசதி, குடிநீர் வசதி செய்து தரவில்லை. இது குறித்து முறையிட கலெக்டர் ஆர்.டி.ஓ. என்று பல அதிகாரிகளை சந்தித்து வருகிறோம். மேலும் அந்த நிறுவனத்தை அரசு முடக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்ற ஒப்படைக்க போவதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு காலனி சேகர் தலைமையில், 15-க்கும் மேற்பட்டோர் தங்களின் ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஒப்படைக்க வந்தனர். ஆனால் அவர்கள் போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனை அடுத்து அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.






